Thursday, 16 October 2014

NFPE DIAMOND JUBILEE CONVENTION AT MAYILADUTURAI DIVISION A GRAND SUCCESS !

அன்புத் தோழர்களுக்கு / தோழியர்களுக்கு  வணக்கம். 

கடந்த 12.10.2014 ஞாயிறு அன்று நமது அஞ்சல் மூன்று கோட்டச்சங்கம் சார்பில் NFPE  வைரவிழா கருத்தரங்கு  நிகழ்ச்சி ,  மயிலாடுதுறை பட்ட மங்கலத் தெரு  கோவிந்தம்மாள்  திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.  பிற்பகல் சுமார் 02.30 மணியளவில்  கொடியேற்று நிகழ்வுடன் நிகழ்ச்சி துவங்கியது . நமது சம்மேளனக் கொடியை  நம்முடைய அஞ்சல் மூன்றின் முன்னாள் பொதுச் செயலர் தோழர்.  KVS  அவர்கள் ஏற்றி வைக்க,  மாநிலச் செயலர் தோழர்.  J .R . அவர்கள் விண்ணதிரும்  கோஷங்களை எழுப்பிட,  விழா இனிதே துவங்கியது.

நமது அஞ்சல் மூன்றின் கோட்டச் செயலர்  தோழர். K . துரை  அவர்கள் வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து  கோட்டத் தலைவர் தோழர். P . ரவிச்சந்திரன் அவர்கள்  தலைமையுரை நல்கிட அதனைத் தொடர்ந்து  கருத்தரங்க நிகழ்வு  துவங்கியது.

நம் அஞ்சல் மூன்றின் மாநிலச் செயலர் தோழர். J .R . அவர்கள் , நம்முடைய அஞ்சல் தொழிற்சங்க வரலாற்றினை  உணர்வு பொங்க மிகச் சிறப்பாக எடுத்துரைத்தார்.  தொடர்ந்து  நம்முடைய  அஞ்சல் மூன்றின் அகில இந்திய பொதுச் செயலர் தோழர். N .S . அவர்கள் இலாக்காவின் இன்றைய நிலைமை குறித்தும் , மாறிவரும் சூழலில்  நம்முடைய தொழிற்சங்கக் கடமை குறித்தும் நாம் இதுவரை அறியாத பல  செய்திகளை  மிகச் சிறப்பாக பகிர்ந்து கொண்டார். 

இதன் பின்னர் , நம்முடைய  அஞ்சல்  மூன்று பாபநாசம் கிளையின் முன்னாள் தலைவர் தோழர். சௌந்தரராஜன் அவர்கள் , நம்முடைய மாநிலச் சங்க முயற்சியால்,  நிர்வாகத்தால் அனுமதி மறுக்கப்பட்ட தனக்கு  நீதி மன்றம் மூலம் AAO  தேர்வு எழுத அனுமதி பெற்றதையும், மீண்டும் RESULT  நிறுத்தி வைத்ததை  தகர்த்து ,  அவர்  தேர்வு பெற்ற அறிவிப்பை  வெளியிட மாநிலச் சங்கம்  முழு முயற்சி எடுத்ததையும்  , அதனையும் தாண்டி  CPMG  அவர்களிடம் நேரில் விவாதித்து , மேல் முறையீட்டுக்கு நிர்வாகம் செல்லாமல்  அவருக்கு பதவி உயர்வு  பெற்றுத் தந்ததையும் நினைவு கூர்ந்து பாராட்டி,  வந்திருந்த அனைவருக்கும் இனிப்பு வழங்கி  மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

அடுத்ததாக ,  மயிலாடுதுறை முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்  திரு. ஜெகவீரபாண்டியன் அவர்கள்  வாழ்த்துரை வழங்கினார். அந்த வாழ்த்துரையில்  மயிலாடுதுறை அஞ்சல்  பகுதி போராட்டங்களில் தங்களின் பங்கு எவ்வாறு இருந்தது என்பதை விரிவாக எடுத்துரைத்தார். கூறைநாடு அஞ்சலகம்  மூடப்படுவதை எதிர்த்து , தோழர் J .R . முயற்சியால்  தாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டதையும், முன்னாள் இலாக்கா அமைச்சர் திரு. சுக்ராம் அவர்களுக்கு எதிராக  அரசு விழாவில் தாங்கள் கறுப்புக் கொடி  காட்டி போராடியதையும், அதனால் கூறைநாடு அஞ்சலகம் மூடப்படுவது தடுத்து நிறுத்தப்பட்டது குறித்தும், அது போல மயிலாடுதுறை பஜார் அஞ்சலகம் மூடலை எதிர்த்து  தோழர். J .R . முயற்சியால் தாங்கள்  மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு அந்த அஞ்சலக மூடலை தடுத்து நிறுத்தியதையும் நினைவு கூர்ந்தார். 

பின்னர் பேசிய  நம்முடைய  முன்னாள் பொதுச் செயலர் தோழர். KVS  அவர்கள் , ஏழாவது ஊதியக் குழு முன்னர் நம்முடைய சங்கம்  மற்றும் சம்மேளனம் சார்பாக அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவின் சாராம்சம் குறித்து விரிவானதொரு சிறப்பான உரையினை  வழங்கினார். 

இதனை அடுத்து , நம்முடன் பணியாற்றி ஒய்வு பெற்ற  மூத்த இயக்கத்தின் தலைவர்களுக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தோழர். G .S . என்று அழைக்கப் படும் தோழர். G . சுப்பிரமணியன் அவர்கள்,  தோழர். S . தியாகராஜன் அவர்கள்  தோழர். சாமி. கணேசன் அவர்கள் , நாகை தோழரும். NCA  எழுச்சி பாசறையின் மாநிலச் செயலருமான தோழர். S . கோவிந்தராசு, பட்டுக் கோட்டை தோழரும். மாநில NFPE  GDS  சங்கத்தின் காப்பாளருமான  தோழர். பால்பாண்டி ஆகியோர் அவர்தம்  தொழிற்சங்க சேவைகள் மற்றும் தியாகங்களை நினைவு கூர்ந்து , பாராட்டி சால்வை அணிவித்து கௌரவிக்கப் பட்டார்கள்.

இறுதியில் , NFPE  GDS  சங்க மாநிலச் செயலர் தோழர். R . தன்ராஜ்,  அஞ்சல் மூன்று மண்டலச் செயலர் தோழர். R . குமார் , அஞ்சல் மூன்று மாநில உதவி நிதிச்செயலர் தோழர். R . பெருமாள் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினார்.  நிகழ்ச்சி காலம் அதிகமாக ஆனதால் ,  வந்திருந்த  அஞ்சல் மூன்று , அஞ்சல் நான்கு மற்றும் GDS  சங்க கோட்ட/கிளைச் செயலர்கள் அனைவரையும் வாழ்த்திப் பேச அழைத்திட முடியவில்லை. ஆனால் அனைவருக்கும் மயிலாடுதுறை அஞ்சல் மூன்று கோட்டச் சங்கத்தின் சார்பாக  கைத்தறி ஆடை அணிவித்து கௌரவம் செய்யப் பட்டது.

இந்த நிகழ்வு கிட்டத்தட்ட  ஒரு மத்திய மண்டல மாநாடு போல அமைந்திருந்தது என்றால் அது மிகையாகாது.  மண்டலம் முழுதும் இருந்து சுமார் 300 தோழர்கள் கொட்டும் மழையிலும்  கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள். இரவு 08.00 மணியளவில்  கோட்டச் சங்கத்தின் நிதிச் செயலர் தோழர். K . வெங்கடேஷ் அவர்கள் நன்றி கூற விழா இனிதே முடிவுற்றது. 

வந்திருந்த தோழர்கள் அனைவரும் இதுபோல் நிகழ்ச்சி இது நாள் வரை நம் கோட்டத்தில் நடக்கவில்லையே என்று  வருத்தப்பட்டனர்.   இனி வருங்காலத்தில்  தொடர்ந்து  தலைவர்களை அழைத்து , இலாக்காவில் நடைபெறும் நிகழ்வுகள் , தொழிற்சங்கத்தின் போராட்டங்கள் , இலாக்கா விதிகள்  உள்ளிட்ட  பிரச்சினைகள் குறித்து  தெரிந்து கொள்ள  அடிக்கடி  நிகழ்சிகள் அமைத்திட வேண்டினர்.

நிகழ்ச்சியில் எடுக்கப் பட்ட  சில புகைப்படங்களை உங்களின் பார்வைக்கு கீழே தருகிறோம்.





















No comments:

Post a Comment